tamilnadu

img

இங்கே கூலித் தொழிலாளிகள் திடீரென்று வானத்திலிருந்து கீழே குதித்துவிடவில்லை - பேரா. விஜய் பிரசாத்

இப்பூமிக்குப் பித்து பிடித்துள்ளது. ஆயிரமாயிரம் மக்கள் தத்தம் வீடுகளில் ஊரடங்கிற்கு உட்பட்டு அடைபட்டுள்ளனர், அத்தியாவசிய பணிகளிலிருக்கும் லட்சக்கணக்கானோர்-அல்லது அரசு உதவியின்றி வீட்டில் இருக்கும் வசதி இல்லாதோர்-இன்னும் வேலைக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள்; ஆயிரக்கணக்கானோர் அவசரசிகிச்சைப்பிரிவில் நேரமின்மை மற்றும் உபகரணத் தட்டுப்பாடினால் அவதிப்படும் பல்லாயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் பார்த்துக்கொள்ளப்படுகிறார்கள். மொத்த மக்கள்தொகையில் ஒரு சிறு பங்கு-கோடீஸ்வரர்கள்-மட்டும் தங்களையொரு தனித்தீவாக பிறரிடமிருந்து தனித்துக்கொள்ள முடியுமென்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கிருமிகள் எல்லையறியாது; இன்று உலகம் முழுதும் பரவிக்கிடக்கும் சார்ஸ்-கோவி-2 கிருமி வகை நம்மை நிலைகுலையச் செய்திருக்கிறது; சீனா தொற்று வளைவின் வீரியத்தை சமன்செய்துவிட்ட போதிலும் பிற நாடுகளின் நிலை அச்சுறுத்துகிறது; தூரத்தில் தெரியும் ஒளி எப்போதுமல்லாததுபோல் இன்று மங்கியுள்ளது.

திறமையற்ற, இதயமற்ற அரசுகள், சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளோர் பற்றி எந்தவொரு யோசனையோ திட்டமிடலோ இன்றி தங்களது இரும்புக்கரங்களை சுழற்றிவிட்டன. மேட்டுக்குடியினரும், நடுத்தரவர்க்கத்தினரும் வீட்டிலே இருந்து, இணையம் மூலம் வேலை செய்து, குழந்தைகளுக்கு கல்வி பயில்விப்பது என்பது ஒரு விஷயம். இது கோடிக்கணக்கான புலம்பெயர் மற்றும் தினக்கூலித் தொழிலாளிகள், அடுத்தவேளை உணவை எதிர்பார்த்து வாழும் மக்கள், வீடில்லாதோர் போன்றோருக்குச் சாத்தியமற்ற ஒன்று. ஊரடங்கு, தனிமைப்படுத்துதல், சமூக தள்ளியிருத்தல் போன்ற வார்த்தைகள், தினம் தினம் இச்சமூகச் சுழற்சி பிறளாது தாங்கிப்பிடிக்கும், கோடிக்கணக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் பாட்டாளி மக்களுக்கு அர்த்தமற்றவை; தங்களது உழைப்பினால் அவர்கள் பயன்பெறவில்லை, ஆனால் கண்டிப்பாக ஒரு சிறு கூட்டம் செழிப்படைந்து, இன்று அந்த வளத்துடன் ஓளிந்துகொண்டிருக்கிறது- தங்களை செழிப்பாக்கிய நிதர்சனத்தை எதிர்கொள்ளப் பயந்து.

இத்தாலிய எழுத்தாளர், பிரான்செஸ்கா மெலான்றி, தனது ‘எதிர்காலத்திலிருந்து பிரெஞ்சு மக்களுக்கொரு கடிதம்’ என்ற பதிவில் (லிபரேசன், 18 மார்ச்) கூறுகிறார்: “வர்க்கமே அனைத்து மாற்றத்தையும் நிர்ணயிக்கும். அழகிய தோட்டமுடைய ஒரு வீட்டில் அடைப்பட்டிருப்பதும் நெரிசல்மிக்க ஒரு அரசு திட்டக்குடியிருப்பில் வாழ்வதும் ஒன்றாகாது. அதேபோல்தான் வீட்டிலிருந்தபடி வேலைசெய்வதற்கான வசதிக்கும், உன் வேலையே பறிபோய்விட்டிருக்கும் நிதர்சனத்திற்கும் உள்ள வித்தியாசம். நோயினை தடுத்துவெல்ல நீ பயணிக்கும் படகு போன்றே அனைவரது படகும் தோற்றமளிக்காது; அனைவரது படகும் ஒன்றுபோன்றதல்ல, என்றுமே அது ஒன்றாக இருந்ததில்லை”. 

அவரது கருத்தை ஒலுடிமெஹின் அடெக்பெயெ-தனது லாகோஸ் (நைஜிரியா) நகரில் வாழும் 6 கோடி தினக்கூலித் தொழிலாளர்களைப் பார்க்கும் அவரும்-எதிரொலிக்கிறார்: “இவர்கள் நோயிலிருந்து தப்பித்தாலும் பசியால் கொல்லப்படுவர் (அவர்களின் நடுவே தங்கள் குடும்பங்களில் நோய்வாய்பட்டுள்ளோரை செவிலியர்போலப் பார்த்துக்கொள்ளும் பெண்கள் கொரோனா கிருமி தொற்று அதிகளவில் ஏற்படும் ஆபத்தில் உள்ளனர்).”  தெற்கு ஆப்பிரிக்க அரசு, தொழிலாளர்களை அவர்களது தற்காலிக இருப்பிடத்திலிருந்து வெளியேற்ற முனைகிறது; நெரிசல்மிக்க பகுதிகளை உடைக்கவேண்டும் என்று காரணம் கூறுகிறது. கேப் டவுன் நடிஃபுனா உக்வாசி-யைச் சேர்ந்த அக்ஸோலில் நோடிவாலா கூறுகிறார்: “கட்டாய வெளியேற்றம் என்பதற்கு ஒரு அலங்காரப்படுத்தப்பட்ட வேறு ஒரு சொல் தான் நெருக்க அடர்வு தளர்த்துதல் (de-densification)”. 
இதுதான் இன்றைக்கு கொரோனா அதிர்ச்சியின் விளைவாக உலகம் முழுவதுமுள்ள உழைக்கும் வர்க்கத்திற்கு நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் நடப்பது என்ன?
இப்பாரபட்சத்தின் பிம்பமாக தில்லி ஆனந்த் விகார் பேருந்து நிலையம் உள்ளது. அங்கே ஆயிரக்கணக்கானக்கான தொழிற்சாலை மற்றும் சேவைத்துறையைச் சேர்ந்த தொழிலாளிகள், நாடு ஊரடங்கிற்குத் தள்ளப்பட்ட நிலையில் ஒட்டி உரசி நின்றுகொண்டிருந்தனர்.  எங்கள் மூத்த தோழர் பத்திரிகையாளர் பி.சாய்நாத் எழுதுகிறார்: “உழைக்கும் வர்க்கத்திற்கிருக்கும் ஒரே போக்குவரத்து வசதி அவர்களது கால்கள் மட்டுமே. சிலர் மிதிவண்டிகளில் வீடு நோக்கிச் செல்கின்றனர். பலர் இரயில், பேருந்து மற்றும் போக்குவரத்துச் சேவை நிறுத்தத்தினால் நடுவழியில் திக்கற்று நிற்கின்றனர்.

இந்நிலை தொடர்ந்தால் ஏற்படப்போகும் நரகவாழ்க்கையைப்பற்றிய நினைப்பே அச்சுறுத்துகிறது. கூட்டம் கூட்டமாக வீடு நோக்கி நடக்கும் மக்களைக் கற்பனை செய்; குஜராத் நகரங்களிலிருந்து ராஜஸ்தானிலுள்ள கிராமங்கள் நோக்கி; ஹைதராபாத்திலிருந்து தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தின் கடைக் கோடி கிராமங்கள் நோக்கி; தில்லியிலிருந்து உத்தரப்பிரதேசம், ஏன் பீகாரிலுள்ள இடங்களுக்கு; மும்பையிலிருந்து கணக்கிடமுடியாத இடங்களுக்கெல்லாம். இவர்களுக்கு எந்த உதவியும் கிட்டாவிடில், வேகமாகக் குறைந்துவரும் உணவு மற்றும் நீர் ஆதாரங்களுமே ஒரு பேரிடரைஉண்டுசெய்யக்கூடும். வயிற்றுப்போக்கு, காலரா போன்ற பழைய நோய்களுமே அவர்களை நிலைகுலையச் செய்யும்.”

30 வயதான நீரஜ் குமார், தொழிலாளர்களுக்கு உருப்படி வீதம் சம்பளம் அளிக்கப்படும் ஒரு துணித்தொழிற்சாலையில் வேலை செய்கிறார். ‘எங்களிடம் இருந்த பணம் எல்லாம் தீர்ந்துவிட்டது. எனக்கு இரண்டு குழந்தைகள். நான் என்ன செய்வேன்? வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு, பணமும் உணவும் இன்றி இருக்கிறோம்’ என்று ‘தி வயர்’- ஊடகத்திடம் கூறினார். இப்போது அவர் இருநூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள புதான் நோக்கிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். பீகாரின் மதுபானியைச் சேர்ந்த முகேஷ் குமாரின் முன்னே 1150 கிலோமீட்டர் பயணம் உள்ளது. ஒரு உணவகத்தில் வேலை செய்துகொண்டிருந்த அவருக்கு, கூலியின் பகுதியாக உணவு கிடைத்துக்கொண்டிருந்தது. இப்போது அவ்வுணவகம் மூடப்பட்டுவிட்டது. ‘என்னிடம் பணம் ஏதும் இல்லை. நான் நோயால் பாதிக்கப்பட்டால் பார்த்துக்கொள்ளவும் இங்கு யாரும் இல்லை, அதனால் நான் கிளம்புகிறேன்’.

‘சபிக்கப்பட்டவர்களின்’ துயரமும் கோபமும்
‘டிரைகான்டினென்டல் சமூக ஆராய்ச்சிக் கழகத்தின்’ தில்லி அலுவலகம் நிரந்தர வேலையற்ற துணித் தொழிலாளர்களிடம் ஒரு கருத்தாய்வு மேற்கொண்டது. ஒருவர், ‘நாங்கள் இங்கு வேலைக்காக வந்துள்ளோம்’என்றும், ‘குடும்பங்களை கிராமங்களிலே விட்டுவிட்டு வந்துள்ளோம். முடிந்த அளவிற்கு வேலைகள் செய்து, கொஞ்சம் அதிகம் சம்பாதித்து அவர்களுக்கு போதிய உணவும் வசதிகளும் அளிக்கவே நாங்கள் பாடுபடுகிறோம்’ என்று கூறினார். நாங்கள் பேசிய தொழிலாளிகளில் நான்கில் மூன்று பேர், குடும்பத்தில் தாங்கள் ஒருவர் மட்டுமே சம்பாதிப்பதாகக் கூறினர்; வேளாண் நெருக்கடி, சம்பாதிக்கும் திறனை பெரிதாக பாதித்துவிட்ட நிலையில் இவர்களது குடும்பங்கள், கிராமப்புற குடும்பக்கட்டமைப்பு நிலைகுலையாமல் சீராக இயங்க ஊதியமில்லா உழைப்பை அளித்துக்கொண்டிருக்கும் நிலையிலும், இப்புலம்பெயர் தொழிலாளர்களது சொற்ப வருவாயை மட்டுமே நம்பியுள்ளன. இப்போது இந்த தொழிலாளர்கள் தான்-அரசின் ஆதரவின்றி-வேளாண் நெருக்கடியில் தவிக்கும் தங்கள் வீடுகளை நோக்கி, சிலர் கொரானாதொற்றுடன், நடந்துகொண்டிருக்கின்றனர். 

டிரைகான்டினென்டல்-ஐ சேர்ந்த ஆராச்சியாளர் உமேஷ் யாதவ், தொழிலாளர்கள் கூட்டமாக தில்லியைவிட்டு வெளியேறும் நிலையில் எழுதினார்: “இப்புலம்பெயர் தொழிலாளிகள் திடீரென்று ஆகாயத்திலிருந்து விழவில்லை. நம் நகரங்களின் விளிம்புகளிலே, கெட்டோகளிலும் (ghetto) சேரிகளிலும், அவர்கள் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள், திட்டமிட்டே மேட்டுக்குடியின் பார்வையில் படாதவாறு, அவர்களால் கவனிக்கப்படாதவாறு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்”. நகரங்களை விட்டு வெளியேற நீண்ட வரிசைகளில் அவர்கள் நிற்கையில் மட்டும் அவசர அவசரமாக காட்டப்படும் காருண்யம் போதாது; அவர்களை விளிம்பிலேயே வைத்து, உழைப்பைச் சுரண்டி பின்பு வீசியெறியும் இக்கட்டமைப்பிற்கெதிராக போராடவேண்டும், பழையன கழிந்து புதிய அமைப்பை உருவாக்குதல் வேண்டும். இங்கு நிலவும் சமூக சமத்துவமின்மையின் அவலம் இப்பூமியில் சபிக்கப்பட்டவர்களிடையே பெருந்துயரையும் கோபத்தையும் உண்டாக்கியுள்ளது.

உலகம் முழுவதும் 300 கோடி கூலித்தொழிலாளர்களின் நீண்ட வெளியேற்றத்தை நிகழ்த்திவிட்டு அவர்களை மூன்று வாரத்திற்கு வீட்டிலேயே இருங்கள் என்று அரசு கூறினால் என்னவாகும்? இவர்கள், சேமித்துவைக்கும் வாய்ப்பேயில்லாதபடி குறைவாக ஊதியமளிக்கப்பட்டவர்கள், இக்கட்டான இந்த நேரத்தைச் சமாளிக்கும் அளவுக்கு வாழ்வாதாரங்களோ வசதிகளோ அற்றவர்கள். அரசு, பொது விநியோகத் திட்டம் மற்றும் இலவச உணவகங்கள் மூலம் (டிரைகான்டினென்டல்-ஐ சேர்ந்த சுபின் டென்னிஸ் கூறியது போல), இவர்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்க வழி செய்வது மிக அவசியமாகிறது. இல்லாவிடில் உலகம் முழுவதும் பரவியிருக்கும் இக்கொரோனா தாக்குதல் பரவலான பசி மற்றும் பஞ்சத்திற்கு வழிவகுக்கும். இந்தியாவில் இவ்வூரடங்கினால் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறை, மிளகு, அரிசி, கோதுமை மற்றும் பருப்பு வகைகள் போன்ற குறுவைப் பயிர்கள் சாகுபடியை பாதித்து கிராமப்புறங்களில் நிலவும் நெருக்கடி நிலை இன்னும் தீவிரமடையும் ஆபத்து உள்ளது. இந்தியாவில் குறுவைச் சாகுபடி பொய்ப்பது பேரழிவில் முடியும்.

25 கோடி மக்கள் வேலை இழப்பார்கள்
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) மதிப்பீட்டின்படி உலகம் முழுதும் குறைந்தது 25 கோடி மக்கள் கொரோனாவினால் தங்கள் வேலைகளை இழப்பார்கள், மேலும் 3.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வருவாயை இழப்பார்கள். ஆனால், ஐஎல்ஓ-வின் தலைமை நிர்வாக அதிகாரி, கய் ரைடர் கூறியது, ‘ இப்போதே தெளிவாகத் தெரிகிறது, இந்த மதிப்பீடு கொரோனா தாக்குதலின் விளைவுகளைக் குறைத்து மதிப்பிட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளனவென்று’. கொரானாஅதிர்வு ஏற்படும் முன்னரே 71 கோடி மக்கள் இடப்பெயர்வுக்குள்ளாக்கப்பட்டனர்-இரண்டு நொடிகளுக்கு ஒருவர் என்ற வேகத்தில். இந்நிலையில் விளைவுகளைக் கணக்கெடுப்பது திகைப்பூட்டுமளவிற்கு கடினமாகவுள்ளது-எவ்வளவு பேர், அரசின் ‘ஊக்குவிப்புத் திட்டங்களில்’ எதுவும் அவர்களுக்கு வந்து சேராமல், அனைத்தையும் இழக்கப்போகின்றனர்? கோடிக்கணக்கில் மதிப்பிடப்படும் இவ்வூக்குவிப்புத் திட்டங்கள் மத்திய வங்கிகளிலிருந்து நிதி நிறுவனங்கள் மற்றும் பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் கருவூலங்களுக்கும், கோடீஸ்வரர்களின் பெட்டகங்களுக்குமே செல்கின்றன. தப்பித்தவறி, சொர்க்கத்திலிருந்து விழும் பணமும் அடுக்குமாடி வீடுகளிலேயே தங்கி விடுகின்றன. தங்கள் வாழ்வை இழந்து நிலைகுலைந்து நிற்கும் நூறுகோடி மக்கள் அதை உபயோகிப்பதற்கான வாய்ப்பே ஏற்படாது, ஏனெனில் அவர்கள் கைகளுக்கு அப்பணம் எட்டாக்கனி. 


இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வியலில் ஊறிய வரிகளை அளித்த கைஃபி ஆஸ்மி (1919-2002) அவர்கள், மக்கான் (வீடு) என்று கட்டுமானத் தொழிலாளர்களின் பாட்டொன்றைக் கவிதையாக எழுதினார்:

மாளிகை கட்டப்பட்டவுடன், ஒரு காவலனைக் கொண்டு நம்மை வெளியேற்றினர்.
குப்பையில் உறங்கினோம், நம் கலையின் சப்தத்தோடு;
அயர்ச்சியில் அதிரும் நம்மிதயத்துடிப்பு,
கட்டிய மாளிகையின் பிம்பத்தை மூடிய நம் விழிகளுள் தாங்கி. 
என்றும்போல் பகல், நம் தலையில் உருகி வழிகிறது,
இரவு, கரிய அம்புகள்கொண்டு நம் கண்களைத் துளைக்கிறது,
இன்றிரவு வீசுவதோ புழுதிக்காற்று.
நடைபாதையில் உறக்கமென்பது நடக்காத காரியம்.
அனைவரும் எழுங்கள்! நானும் எழுகிறேன். நீயும். நீயும்.
அப்படியேனும் இச்சுவர்களிலொரு சன்னல் திறக்கட்டும்.

சுவரில் தெரியும் ஒரு சன்னல்
கேரளா - இடது ஜனநாயக முன்னணி ஆட்சியிலுள்ள மாநிலம்- இவ்வச்சுறுத்தும் சுவரில் தெரியும் ஒரு சன்னலே. கேரள அரசு, அடைக்கலம் வேண்டியிருக்கும் புலம்பெயர் தொழிலாளிகளுக்காக ஆயிரக்கணக்கான முகாம்கள் திறந்துகொண்டிருக்கிறது. 28 மார்ச் நிலவரப்படி 144,145 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 4,603 முகாம்களில் இடமளிக்கப்பட்டுள்ளது, மேலும் பல முகாம்கள் திறக்கப்படுகின்றன. ஆதரவற்றோர் மற்றும் இருப்பிடமில்லாதோருக்காகவும் அரசு முகாம்கள் கட்டிக்கொண்டிருக்கிறது- இதுவரை திறக்கப்பட்ட 44 முகாம்களில் 2,569 மக்கள் தங்கியிருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் பொது சமையல் கூடங்கள், மக்களுக்கு இலவசமாக நல்ல உணவு வழங்குவதற்காக, அரசால் திறக்கப்பட்டுள்ளன. சமையல் கூடங்களுக்கு வரவியலாதோரின் வீடுகளுக்கே உணவு அனுப்பப்படுகிறது. 

சுவர்களில் துளையிட்டு, சன்னல்கள் கட்டுவோம்.
தமிழில்: விகாஷ் ஷிவ்ராம், பொள்ளாச்சி